திங்கள், 25 ஆகஸ்ட், 2014

என் தலைவர் கலைஞரின் கடிதம்

சென்னை, மே 22- ஆரிய சக்திகள் தி.மு.க.வை அழித்து முடிக்கத் தீட்டும் திட்டங்கள் குறித்தும் கழகத்தில் தாம் கடந்து வந்த பாதை குறித்தும் சுயமரியாதைப் புதினமாக இன்றைய முர சொலியில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியுள்ள கடிதம் வருமாறு:
உடன்பிறப்பே, என்னைப் பற்றியும் - என் குடும்ப  வாழ்க்கை மற்றும் பொது வாழ்க்கை ஆகியவைப் பற்றியும்  -  நேரம் வரும்போதெல்லாம்  பலமுறை உனக்கும்,  உன் வாயிலாக  ஊராருக்கும்  சொல்லியிருக்கிறேன்.    இப்பொழுது சொல்லப் போவது  அதைப் போன்ற  சுய புராணம்  அல்ல.    சுய புராணத்தைத் தான்  நெஞ்சுக்கு  நீதி  என்ற  தலைப்பில் அய்ந்து பாகங்கள்  எழுதி முடித்திருக் கிறேனே!   இப்பொழுது  நான் எழுதப் போவதை அடுத்த பாகத்தின்  முன்னுரை என்று  கருதிக் கொண்டாலும் சரி  -   அதற்கிடையே  எழுந்துள்ள மன ஓலம் என்று எண்ணிக் கொண்டாலும் சரி -  இந்தச் சூழலில்  இவற்றை  நான் ஞாபகப்படுத்தியே  தீர வேண்டும்.
நான் உயிரினும்  மேலாகக் கருதும்  நமது  கழகம்,  பெரும்  தோல்வியைச் சந்தித்து  ஆட்சியை  இழந் திருக்கும்  கால கட்டம் இது.    அந்த இழப்புக்கு எது காரணம்?  இணைந்த கட்சிகளுக்கு வழங்கப் பட்ட இடங்களின் எண்ணிக்கையா?   அல்லது  அவர்கள் வலியுறுத்தி வாங்கிக் கொண்ட  தொகுதி களின் கணக்கா? தமிழ்நாட்டிற்கென்றே  தனியான  ஜபர்தஸ்துகளை - ஜனநாயக விரோதச் செயல்களை -  சாட்டைகளாகக் கொண்டு  -  சர்வாதிகார பாட்டை வகுத்துக் கொண்ட  தேர்தல் கமிஷன்  எனும்  பிரம்ம ராட்சச பூதமா?  என்ற கேள்வி களுக்கெல்லாம்  நான்  போக விரும்ப வில்லை.   ஆனால்  இந்தியாவிலேயே  அல்லது  தமிழ் நாட்டிலேயே  அதிகாரச் செல்வாக்கைப் பெருக்கி  -  ஆயிரம் கோடி,  பத்தாயிரம் கோடி,  இலட்சம்  கோடி சம்பாதித்து  மூட்டைகளாகக் கட்டி  வைத்திருக்கிற குடும்பம்,  கருணாநிதியின் குடும்பம்  என்று  தேர்தல்  நேரத்தில்  பிரச்சாரம் செய்தவர்கள்,  மழை விட்டும்  தூறல் விடவில்லை  என்பதைப் போல  -  இப்போதும்கூட  அந்தப் பிரச் சாரத்தை ஏடுகள் வாயிலாக  - ஏனைய ஊடகங்களின்  வாயிலாக கூறிக் கொண்டிருக் கிறார்களே,  அவற்றை  பொய்யுரை  என்றும்,  புனைந்துரை  என்றும்,  புளுகு மாயப் புழுதி மாயம் என்றும்,  என் தமிழ் மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக  சிலவற்றைத்  தொகுத்துச் சொல்ல விரும்புகிறேன்.
செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறக்கவில்லை
நான் பலமுறை கூறியுள்ளபடி  செல்வச் செழிப்பான பெரும் தனவந்தர் குடும்பத்தில் நான்  பிறந்தவன் அல்லன்!   தஞ்சை மாவட்டத்தில் (தற்போது நாகை மாவட்டத்தில்)  திருவும் வளமும் கொண்ட  திருக்குவளை  கிராமத்தில்  - சுற்றிலும் சூழ்ந்திருந்த  வயல்களில்  கிடைத்த பயிரையும்,  நெல்லையும்,  அரிசியையும்  பயன்படுத்திக் கொண்டு  -  ஒரு ஓட்டுவில்லை  வீட்டில்  விவ சாயியாகவும் - இசை மேதைகளில்  ஒருவராகவும்  இருந்த  -  முத்துவேல  நாதசுரக்காரருக்கு  மூன்றாவது  பிள்ளையாக  பிறந்தவன் நான்.
நான் உருண்டும் புரண்டும்  தவழ்ந்தும்  தள்ளாடி நடந்தும்  பின்னர் திருவாரூர்  பள்ளியில்  பயின்றும் -  அங்கு பெற்ற  அறிவால்  அந்த இளமையிலேயே  அண்ணாவையும்,  பெரியாரையும்  முறையே  அரசியல் இயக்கத்திற்கும்,  அறிவு இயக்கத்திற்கும்  வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டும்  - சூடு  தணியாத  சுயமரியாதை உணர்வோடு  பொது வாழ்க்கையைத் தொடங்கியவன் நான்.
பதினான்கு  வயதிலேயே  பனகல்  அரசரைப் படித்து  -  படிக்க முடியாது  கட்டாய இந்தியை என்று  மொழிப் போரில் புகுந்து  -  அதற்கு அடுத்தடுத்த  தொடர் களங்கள்  பலவற்றைச் சந்தித்து  -  அய்ந்து முறை  முதல் அமைச்சராகவும்  -  12 முறை  தமிழகச் சட்டப் பேரவை உறுப் பினராகவும்  வெற்றி பெற்று   -  பொன் விழாக்கள்,  பவள விழாக்கள்  கொண்டாடியும் கூட - இலக்கிய வேந்தர், கலைவேந்தர்  என  வேந்தர்  பட்டங்க ளைப் பெற்றாலுங்கூட  -  வேண நிலங்களுக்குச் சொந்தக்காரன்  என்றோ  -  வான் தொடும்  மாளி கைகளுக்கு  உரிமையாளன்  என்றோ  -  அடுக்கி வைத்த பணப்பெட்டிகளுக்கு  அதிபர் என்றோ  என்னை  நான் என்றைக்குமே  ஆக்கிக் கொள்ள நினைத்ததும் இல்லை;  அதற்கான முயற்சிகளில்  ஈடுபட்டதும் இல்லை. அவற்றைத் தேடிக் கொள்ள திருட்டு வழியை  தேடிக் கொண்டவனுமல்ல!  அப்படியானால்  இத்தனை ஆண்டுக் காலம்  கட்சிக்குப் பொருளாளராக -  42 ஆண்டுக் காலம் கட்சிக்குத் தலைவராக  -  19 ஆண்டுக் காலம் ஆட்சிக்கு முதல்வராக இருந்த கால கட்டங்களில்  எதுவுமே  சம்பாதிக்க வில்லையா  என்ற  கேள்விக்கு  நான் தரும் பதில் -  ஆம்; சம்பாதித்தேன் -  தமிழுக்குத் தொண்டு செய்வோன்  -  தமிழ் வாழ தலையும்  கொடுக்கத் துணிவோன் -  என்ற  பட்டப் பெயர்களை,  புகழுரைகளை நிரம்ப  நான் சம் பாதித்தேன்.
நான் ஈட்டிய பொருள்
என் எளிய வாழ்க்கையை  நான் நடத்திட  பொருளீட்டியதே இல்லையென்று  புளுகிடும் துணிவு  எனக்கில்லை -  பொருளீட்டியது  உண்டு -  அந்தப் பொருளில்  பெரும் பகுதியை  வாழ்வின்  இருளில் இருந்தோர்க்கு வழங்கியது உண்டு.
நான் முதலில்  எழுதி,  நானும் நடித்த  சாந்தா அல்லது பழனியப்பன்  எனும்  நாடகத்தை -  1940களில்  நூறு  ரூபாய்க்கு  விற்று  -  அந்தப் பணத்தை  என் குடும்பச் செலவிற்கு மட்டுமல்லா மல்,  அடுத்த நாடகத்திற்கான  முன் செலவு களுக்கும்,  ஆரூர்  நடிகர்  கழக  அமைப்புக்கும்  அளித்தேன்.   அதைத் தொடர்ந்து  கோவை ஜூபிடர்  பிக்சர்ஸ்  தயாரித்த ராஜகுமாரி  படத் திற்கும்  -  சேலம் மாடர்ன்  தியேட்டர்ஸ் தயாரித்த மந்திரி குமாரி,  தேவகி  போன்ற  படங்களுக்கும்  நான் வாங்கிய  பணம்  மாதச் சம்பளமாக  இருந்ததால்  -  அந்த ஊதியத்தை,  வருமான வரி  போக மிச்சப் பணத்தைத்தான் தந்தார்கள்.
பின்னர் பராசக்தி -  மனோகரா -  மலைக் கள்ளன் - இருவர் உள்ளம் - மருதநாட்டு இளவரசி -  திரும்பிப் பார்  -  பணம் - நீதிக்குத் தண்டனை -  இளைஞன்  என்றெல்லாம்  தொடர்ந்து  தற்போது  பொன்னர் - சங்கர்  வரையில்  76  படங்களுக்கு  கதை வசனம் எழுதியிருக்கிறேன்.   சில படங்களுக்கு  பாடல்களும் எழுதியிருக்கிறேன்.
திரு. பிரசாத் அவர்கள்  இயக்கத்தில்  உருவான  தாயில்லா பிள்ளை  மற்றும்  இருவர் உள்ளம்  படங்கள்  -  நூறு நாள்  ஓடினால்  மேலும்  பத்தாயிரம் ரூபாய்  தருவதாக -  திரு. பிரசாத்  அவர்கள்  வாக்களித்து, அவ்வாறே  நூறு நாள்  அந்தப் படம் ஓடியதற்காக  அவர்கள் தந்த  பத்தாயிரம் ரூபாயைக் கொண்டு  -  என்னைப் பெற்றெடுத்த  திருக்குவளையில் - முத்துவேலர், அஞ்சுகம் தாய் சேய் நல விடுதி  கட்டி  -  அந்நாள்  முதல்வர்  திரு. பக்தவத்சலம் அவர்களைக் கொண்டு  திறப்பு விழா நடத்தினேன்.   அப்பொழுது  நான்  எழுத்தாளர் மட்டுமல்ல -  சட்டமன்ற உறுப் பினரும் கூட (எதிர்க்கட்சித் துணைத் தலைவராக வும் இருந்தவன்).   இதே  போல  நான் எழுதிய  படங்கள்  அனைத்திலும் பெற்ற ஊதியத்தில்  -  திருவாருக்கு அடுத்த காட்டூரில்  சிறிதளவு  நஞ்செய்  நிலம் வாங்கவும்  பயன்படுத்திக் கொண்டது போக  மிச்சத்தை  நலிந்தோருக்கே  வழங்கினேன்.    காட்டூரில்  ஆரம்பப் பள்ளிக் கூடக் கட்டிடத்திற்கு  அப்போதே  நிதியளித்து அந்தக் கிராமப் பகுதியில் கல்வி வளர்ச்சிக்கு உதவி புரிந்தேன்.
கட்சிக்குப் பொருளாளராக இருந்தபோது...
கட்சிக்குப் பொருளாளராக இருந்த போது  அண்ணா அவர்களின் ஆணைப்படி,  தமிழகத்தில்  ஊர்தோறும், நகர்தோறும்,  பட்டிதொட்டி, குக்கிராமம்  என  - செல்லாத இடமில்லை  என்ற அளவிற்குச் சென்று  -  கழகக் கொடியேற்ற -  கழகத்தினர் இல்லத்தில்  உணவருந்த -  என்பதற்கெல்லாம்  கட்டணம் விதித்து  -  சென்னை விருகம்பாக்கம்  கழக மாநாட்டில்  அண்ணா அவர்களிடத்தில்,  மூதறிஞர் ராஜாஜி, கண்ணியத் திற்குரிய காயிதே மில்லத்,  சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பொதுவுடைமை வீரர் பி. ராமமூர்த்தி,  பார்வர்ட் பிளாக் இயக்கத்தைச் சேர்ந்த பி.கே. மூக்கையா தேவர்  ஆகியோர் முன்னிலையில்  11 இலட்சத்தை  தேர்தல் நிதியாக அளித்தேன்.
வெள்ள நிவாரண நிதி  -  புயல் நிவாரண  நிதி  -  கைத்தறியாளர் கண்ணீர் துடைக்க  நெசவாளர் நல்வாழ்வுக்காக நிதி  -  இப்படி எத்தனையோ நிதிகள்  வழங்கியும் - வசூலித்து தந்தும்  தொண் டாற்றியவன்தான் நான்.
2004-2005ஆம் ஆண்டில்  மண்ணின் மைந்தன்  திரைப்படத்திற்காக  11  இலட்சம்  ரூபாயும், கண்ணம்மா  திரைப்படத்திற்காக  10 இலட்சம் ரூபாயும்  -  கிடைத்ததை  -  சுனாமி நிவாரணத் தொகையாக  -  அப்போதிருந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம்  தம்பி மு.க. ஸ்டாலின்  மூலமாக  நேரடியாகக் கொடுக்கச் செய்தேன்.  9.7.2008இல் உளியின்  ஓசை   திரைப்படத்திற்காக எனக்குத்  தரப்பட்ட   25  இலட்சம்  ரூபாயில்  ஏழு இலட்சம்  ரூபாய்  வருமான  வரி  போக  - மீதத்  தொகை  18  இலட்ச  ரூபாயை  - அன்று  கலையுலகைச் சேர்ந்த நலிந்த  கலைஞர்களுக்கு  உதவி நிதியாக - கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் நேரடியாக  வழங்கினேன்.  17.9.2009இல்  பெண் சிங்கம்  திரைப் படத்திற்காக  எனக்கு  50  இலட்சம்  ரூபாய்  வழங்கப்பட்டது.  அந்தத் தொகையினை  அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த  மாணவர்களுக்கு  உதவித் தொகையாக வழங்குவேன்  என்று   அறிவித்ததையொட்டி  - அப்படி வழங்கப்பட வேண்டிய தொகை 61  இலட்சம்  ரூபாய்  என்று  கூறிய போது  -      என்னுடைய  சொந்த கையிருப்பு நிதி  11 இலட்சம் ரூபாயையும் சேர்த்து உதவி நிதியாக  29.10.2009 அன்று  வழங்கினேன். 27.4.2010 அன்று இளைஞன்  திரைப் படத்துக்காக  வருமான வரி போக  45  இலட்சம் ரூபாய் எனக்கு  வழங்கப்பட்டது.  அந்தத் தொகையினை  முதலமைச்சர் நிவாரண நிதியிலே  சேர்த்து  -  பிறகு  மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வுக்காக  அந்தத் தொகை உதவி நிதியாக  வழங்கப்பட்டது. பொன்னர் - சங்கர் திரைப்படத்திற்காக 8.9.2009இல்  10 இலட்சம்  ரூபாயும்  - 6.6.2010இல்   12.5  இலட்சம்  ரூபாயும் எனக்கு வழங்கப்பட்டது.  இந்தப் படத்திற்காகத் தரப்பட வேண்டிய 25  இலட்சம்  ரூபாயில்   வரியாக 2.5 இலட்சம் ரூபாய்  போக  எஞ்சியத் தொகை  22.5 இலட்சம்  ரூபாயாகும்.   இந்தத் தொகையிலிருந்து  காவல் துறையிலே  விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் பெற்ற வீரர்களுக்கு வழங்கச் செய்தேன்.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக  அம்பேத்கர்  பிறந்த நாள் விழாவில்  திரு. தொல். திருமாவளவன்  வழங்கிய  50 ஆயிரம் ரூபாய்  நிதியினை  முதலமைச்சர்  பொது நிவாரண நிதியில்  சேர்த்துள்ளேன்.  கழகத்தை தோற்றுவித்த தலை வர்கள்  -  தோன்றா துணைவர்களாக  இருந்த தலை வர்கள்  - உயிரினும் மேலான உடன்பிறப்புகளாம்  தொண்டர்கள்  -  ஆகியோருக்கு  குடும்ப நிதியாக - நல வாழ்வு நிதியாக  அள்ளித் தந்தது ஆயிரம் ஆயிரம்.   அவை இன்றைக்கும்  என்னுடைய பெய ரால்  அமைந்துள்ள அறக் கட்டளைகளின் சார்பில்  தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. என்னு டைய  ஒவ்வொரு  பிறந்த நாள் நிகழ்ச்சி களிலும்,  மாலைக்குப் பதிலாகவும்,  பொன்னாடை களுக்குப் பதிலாகவும்  வழங்கப்பட்ட நிதியினையும் முதல மைச்சர்  பொது நிவாரண நிதியிலே சேர்த்திருக் கிறேன்.   ஈழத்  தமிழர்  நிவாரணத்திற்காக  தமிழக அரசின் சார்பில் நிதி திரட்டப்பட்ட போது  என்னுடைய சொந்தப் பொறுப்பில்  10 லட்சம்  ரூபாயினை நன்கொடையாக வழங்கியிருக்கிறேன்.
நலிந்தோருக்கு உதவி
சன்  தொலைக்காட்சி நிறுவனத்தில்  பங்கு தாரராக  இருந்த என் மனைவி தயாளு அம்மையார்  அதிலிருந்து பிரிந்து வந்த  வகையில்  கிடைக்கப் பெற்ற  100  கோடி  ரூபாயில்  எனக்குக்  கிடைத்த  10  கோடி  ரூபாயில்  ஐந்து கோடி  ரூபாயினை  பங்கீட்டுத் தொகையாக செலுத்தி,   தி.மு.கழகத்தின்  சார்பில் கலைஞர்  கருணாநிதி  அறக்கட்டளை ஒன்றினை  கழகத்திலே உள்ள நலிந்தவர்களுக்கு  உதவி செய்வதற்காக   தொடங்கப்பட்டது.   11.1.2007  அன்று    நடைபெற்ற  30வது  புத்தகக் கண்காட்சி  விழாவில்  நான்  பேசும்போது  - இந்த  5  கோடி ரூபாயிலிருந்து  - தென்னிந்திய  புத்தக விற்பனை யாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு  ஒரு கோடி  ரூபாய் நன்கொடையாக  வழங்கப்படும் என்று  அறிவித்து -  அவ்வாறே அந்தச் சங்கத்துக்கு அந்தத் தொகை  வழங்கப்பட்டது.  அந்தத் தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு  - அந்தச் சங்கத்தின் சார்பில் - ஆண்டுதோறும் நல்ல புத்தகங்களை,  சமுதாய  சீர்திருத்த கருத்துகள் தாங்கிய புத்தகங்களை எழுதும் சிறந்த எழுத்தாளர்கள், வெளியிடும் பதிப்பாளர்கள் ஐந்து பேரை தேர்வு செய்து,  தலா ஒரு இலட்சம் பொற்கிழி வழங்கிடக் கூறியுள்ளேன்.  இந்த  ஒரு கோடி  ரூபாய்  நிதியைக் கொண்டு - கலைஞர்  மு. கருணாநிதி  பொற் கிழி  அறக்கட்டளை  என்ற  பெயரில்  அறக் கட்டளை  ஒன்று  பதிப்பாளர் சங்கத்தின் சார்பில்  நிறுவப்பட்டு  -  இதுவரை  17  அறிஞர்களுக்கு  தலா  ஒரு இலட்சம் ரூபாய் வீதம்  பொற்கிழிகள்  நன்கொடையாக  வழங்கப்பட்டு உள்ளன.  தி.மு. கழகச் சார்புடைய  கலைஞர் கருணாநிதி  அறக்கட்டளைக்கு  நான்  கொடுத்ததில் எஞ்சிய  நான்கு  கோடி  ரூபாய்க்கு  மாதந்தோறும் கிடைக்கின்ற  வட்டித் தொகையிலிருந்து  -  கழகத்திலே உள்ள நலிந்தவர்களுக்கு  உதவித் தொகை  வழங்கப்பட்டு  வருகிறது.  அந்த வகையில்  2005  நவம்பர் மாதம்  முதல் இந்த ஆண்டு மே  மாதம்   வரை  2337  பேருக்கு மொத்தம் 2 கோடியே 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை  வழங்கப்பட்டுள்ளன.  இந்த  உதவித் தொகை  தற்போதும் ஒவ்வொரு மாதமும்  தரப்பட்டு  வருகிறது.
சன்  தொலைக்காட்சியிலிருந்து  எனக்கென்று  கிடைத்த  10  கோடி ரூபாயில்  -  கலைஞர்  கருணாநிதி அறக்கட்டளைக்கு  அளித்த 5 கோடி  ரூபாய் போக  - எஞ்சிய  5 கோடி  ரூபாய்  வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப் பட்டுள்ளது. அந்த வைப்பு  நிதிக்கு  கிடைத்த  வட்டித் தொகையிலிருந்து   ஒரு  கோடி  ரூபாயை  நன்கொடையாக    தமிழ்ச் செம்மொழி நிறுவனத்திற்கு  26.7.2008  அன்று  வழங்கி  - அந்தத் தொகையிலிருந்து  கல் வெட்டியல், தொன்மை யியல்,  நாணயவியல்  ஆகிய பிரிவுகளில்  ஆராய்ச்சி செய்யும்  சான்றோர்களுக்கு  விருது வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கி றேன்.  கோவையில்  நடைபெற்ற  உலகத்  தமிழ்  மாநாட்டின் போது  -   முதன்முறையாக  இந்த  விருது  - பின்லாந்து  நாட்டு  தமிழ்  அறிஞர்  - அஸ்கோ  பர்போலா    அவர்களுக்கு  -  பத்து இலட்ச  ரூபாய்  பொற்கிழியாக  -  நன்கொடை யுடன் வழங்கப்பட்டது.
மருத்துவமனைக்கு என் வீடு!
இதற்கெல்லாம்  மேலாக  சென்னை கோபால புரத்தில் நான் தற்போது  வாழ்ந்து வரும் என்னு டைய  வீட்டைக் கூட  ஏழையெளியோர்க்குப் பயன் படும் வகையில்  ஒரு மருத்துவமனையாக மாற்றி அளிப்பேன் என்றும் அறிவித்து, அதற்கான முறையான பத்திரப் பதிவுகளும் செய்யப்பட்டுள் ளன.
சன்  தொலைக்காட்சி நிறுவனத்தில் திருமதி தயாளு அம்மாள் பங்குதாரராக இருந்து பிரிந்ததையொட்டி 18.10.2005 அன்று சன்  தொலைக்காட்சி நிறுவனத்தால் தரப்பட்ட  தொகை 100  கோடி  ரூபாயில் - 22.5 கோடி ரூபாய்  வருமான வரியாக  முறைப்படி செலுத்திய பின்  எஞ்சிய தொகையான  77.5  கோடி ரூபாய்  பகிர்ந்து கொள்ளப்பட்ட போது -  என் இளைய மகள் கனிமொழி தனக்குக் கிடைத்த   2  கோடி  ரூபாயை  பங்குத் தொகையாக  செலுத்தி,  கலைஞர் தொலைக் காட்சியில்  ஒரு பங்குதாரராக  இருக்கச் சொல்லி நான்தான் வலியுறுத்தினேன்.   கனிமொழி  அதை விரும்பாவிட்டாலுங்கூட,  அப்பா சொல்கிறாரே என்று அதற்கு ஒப்புதல் அளித்த ஒரு குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை.   எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள்   இலாபமோ, நட்டமோ  அந்த இரண்டில்  ஒன்றுக்கு  பங்குதாரராக  ஆகி விடுவது  பொதுவான விஷயம்.   ஆனால் அந்த நிர்வாகத்தின் ஒவ்வொரு நாள் நடவடிக்கைக்கும் அனைத்துப் பங்குதாரரும் பொறுப்பாக ஆவதில்லை என்று முரசொலியில் கலைஞர் எழுதியுள்ளார்.



தர்ப்பைப்புல் முளைத்த இடமாக ஆக்கிட முயற்சி
டெல்லி சி.பி.அய்.  நீதிமன்றத்தில்  கனிமொழிக்காக வாதாடிய  பிரபல வழக்கறிஞர்   திரு. ராம் ஜெத்மலானி  அவர்கள்  ஒரு நிறுவனத்தில்  நடைபெறுகிற  வரவு செலவு  - கொடுக்கல் வாங்கல்  - இவற்றில் எல்லாம் அந்த நிர்வாகத்தின் பங்கு தாரர்கள் பொறுப்பேற்க வேண்டியவர்கள்  என்று  விதிமுறை இல்லை  என்பதை தெளிவாகச் சுட்டிக் காட்டிய பிறகும் கூட;  -  கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகத்தின்  நிர்வாகி  தம்பி சரத்குமாரையும்   -  என் மகள் கனிமொழியையும்  ஜாமீனில் விட மறுத்து  சிறைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
என் மீதும்,  என் குடும்பத்தினர்  மீதும்  வஞ்சம்  தீர்த்துக் கொள்ளும்  படலத்தை  வஞ்சனையாளர் கள்  சிலர்  கூடி  -  வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள  போதிலுங்கூட  -  அத்துடன் நிம்மதி  அடையாது,  நாங்கள்  வாழ்ந்த  இடம்,  வாழும்  இடம்,  நம் இரு வண்ணக் கொடி பறக்கும்  இடம்  அனைத்தும்  தரை மட்டமாகி  - புல் முளைத்த இடமாகப் போக வேண்டும்  என்று  -  அதுவும் தர்ப்பைப் புல்  முளைத்த இடமாகப் போக வேண்டு மென்று  -  குமரி முனையிலிருந்து  இமயக் கொடு முடி வரையிலே  உள்ளவர்கள்  தவம் கிடக்கிறார்கள் என்பது  எனக்குத் தெரியாமல் இல்லை.
உடன்பிறப்பே,
உனக்கும்  இந்த உண்மைகள்  தெரிய வேண்டும் என்பதற்காகத் தான் - உன் தமையன்  நான்  சுயபுராணம்  இது என்றாலும்  - சுயமரியாதைப்  புதினமாக  இதைக் கருதி  -  இந்தக் கடிதத்தின்  தொடக்கத்திலிருந்து  முடிவு வரையில்  ஒவ்வொரு வரியாக  நீ  படித்து  -  சிந்தித்து  -  புரிந்து  கொண்டு  -  செயல்படுத்துவாயானால்  தன்மானக் கழகமாம்  தமிழர்  நலம்  தேடும்  இந்தப் பாசறை  -   அறப்போர்க் கணைகளை  ஆயிரம் ஆயிரம்  இளைஞர்கள்  வடிவில்  -  தம்பி தங்கையர்  உருவில் - நடமாட  விடுவார்கள் என்பது  என் எண்ணம்  -  அந்த அறப்போர்  இறுதிப் போராகி  -  நாம் வெல்வது  திண்ணம்.
- முரசொலியில் கலைஞர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக