சமூகப் போராளியான வைகுண்டர் - அய்யா வழி
அக்காலங்களில் கேரளம், 1050 சாதிகள் கொண்டதாக, பிராமணர்களிடையே உயர்ந்தவர்-களாகக் கருதப்பட்ட நம்பூதிரிகளின் சாதிய ஆட்சிக் கூடாரமாக இருந்தது. நம்பூதிரிகளும், நாயர்களும், வெள்ளாளர்களும் கூட்டுச் சேர்ந்து மிகக் குரூரமான முறையில் மனுதர்ம நடைமுறைகளை அமல்படுத்தி, யாரும் கற்பனை செய்யமுடியாத அளவுக்குச் சாதி வன்கொடுமைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அன்றைய கேரளத்தைப் ‘பைத்தியக்காரர்களின் கூடாரம்’ என்றார் விவேகானந்தர்.
எந்தச் சாதியாக இருந்தாலும் மீன் மாமிசம் சாப்பிடுபவர்கள் தாழ்ந்த சாதி. மாட்டுக் கறி சாப்பிடுபவர்கள் மிகவும் தாழ்ந்த சாதி. நாடார்களும் ஈழவர்களும் மது தயாரிப்பில் இருப்பதால் தாழ்ந்த சாதி. புலையர்கள் தாழ்ந்த சாதியிலும் தாழ்ந்த சாதி. அவர்கள் அடிமைகளாவே நடத்தப்பட்டார்கள். பெண்கள் மாதவிலக்குக் காரணமாகத் தாழ்ந்தார்கள்.
நம்பூதிரிகளை நாயர்கள் நெருங்கலாம். தொடக் கூடாது. நம்பூதிரிகளிடம் இருந்து நாடார், ஈழவர் போன்றோர் முப்பத்தாறு அடி தள்ளியும், புலையர் போன்றோர் தொண்ணூறு அடி தள்ளியும் நிற்க வேண்டும். நாயரிடம் இருந்து நாடார், ஈழவர்கள் பன்னிரண்டு அடி தள்ளியும், புலையர் போன்றோர் அறுபத்து நான்கு அடி தள்ளியும்ந் நிற்கவேண்டும். இப்படியே 1050 சாதிகளுக்கும் தூரக் கணக்குகள் இருந்தன. தீட்டுத் தூரத்தை மீறுபவர்கள், நாயர்களால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள்.
கேரள அரசர்கள் மக்களிடம் வசூலித்த வரி¬யைப்போல, உலகின் வேறு எந்த நாட்டிலும் வசூலிக்கப்பட்டதா என்பதை ஆராய வேண்டும். குறிப்பாக நாடார்களும் ஈழவர்களும் இந்த வரிவிதிப்பால் மிகவும் துன்பத்துக்கு ஆளானார்கள்.
சுமார், நூற்றுக்கும் மேற்பட்ட வரிகளை அவர்கள் செலுத்த வேண்டியிருந்தது. உயிரோடு இருக்கும் 16 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் தலைவரி செலுத்தவேண்டும். செத்தவர்களுக்கும் வரி. சொத்து மதிப்பில் 40 சதவிகிம் வரி. நாடார்கள் தங்கள் வீட்டுக்கும், வீட்டுக்கு ஓலை போட்டாலும் வரி. புல் அறுக்கிறவர்களும், சுமை தூக்குபவர்களும் வரி செலுத்த வேண்டி இருந்தது. பனை ஏறுகிறவன், அவன் ஏறும் ஏணிக்கு வரி; பனை ஏறும்போது அவன் காலில் இட்டுக் கொள்ளும் தளை நாருக்கும் வரி; நிலத்தைத் தரிசாகப் போட்டாலும் வரி. பெண்களுக்கு முலை வளர்ந்தால் முலை வரி, தாலிக்குத் தாலி வரி. சிலவகை ஆடைகள் அணிகள் அணிய குடைபிடிக்க, பல்லக்கில் போக வரி. மீசை வளர்த்தால் கூட வரி உண்டு. கல்யாணத்துக்கும் வரி. கருமாதிக்கும் வரி.
எல்லாவற்றுக்கும் மேலான கொடுமை, நாடார் மற்றும் ஈழவர் பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதிக்கப்படவில்லை. அது ஒரு மரியாதைச் சின்னமாகக் கருதப்பட்டது. நம்பூதிரி பெண்கள் இறைவனுக்கு முன்னால், மார்பைத் திறந்து போட்டார்கள். நாயர் பெண்கள், தமக்கு மேலே உள்ளோர், நம்பூதிரிகள், அரசு அதிகார மையத்தினர்கள் முன் மார்பைத் திறந்து போட வேண்டும். நாடார், ஈழவர் முதலான தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்த பெண்கள் எப்போதுமே எவர் முன்பும் மார்பை மூட முடியாமல் இருந்தது. அவர்கள் இடுப்புக்குக் கீழே, முட்டிக்கு மேலே மட்டும் ஏதேனும் சாக்கு மாதிரியான ஆடை (முண்டு) அணிந்துகொள்ளலாம். குடத்தை இடுப்பில் சுமக்கக் கூடாது. தலையில்தான் சுமக்க வேண்டும். மொத்தத்தில் நாய், மாடுகள், பன்றிகளுக்குச் சுதந்திரம் இருந்த அளவுக்கும், தாழ்ந்த நிலையில் வைக்கப்பட்ட மக்களுக்கு இல்லை.
இவ்வளம் தாழக் கிடப்பாரைக் கைதூக்கி விடக் காலம் இருபெரும் சக்திகளை உருவாக்கித் தந்தது. ஒன்று சீர்த்திருத்தக் கிறிஸ்தவம். மற்றது, வைகுண்ட சாமியின் தோற்றமும் தொண்டும்.
1810-க்குப் பிறகு திருவிதாங்கூர் (கேரளா) அரசு, கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அது ஆங்கில, ஐரோப்பிய கிறிஸ்தவச் சமயப் பாதிரியார்களின் வருகைக்கு நல்ல வழியாக அமைந்தது. குறிப்பாக இந்தப் பகுதியின் கல்வி வளர்ச்சி சீர்திருத்தக் கிறிஸ்தவம் ஆற்றிய பங்கு மகத்தானதாகும். முறையான, சாதி அடிப்படையில் அல்லாத நீதிமன்றமும், தாழ்த்தப்பட்டவர்க்கும் பெண்களுக்கும் இடம் கொடுத்த கல்விக் கூடங்களும் இந்தக் கிறிஸ்தவர்களே முதல் முறையாக இந்தப் பகுதியில் அமைத்தார்கள்.
1906-ல் மகராசன் வேதமாணிக்கம் என்கிற சீர்திருத்த கிறிஸ்தவரே சீர்திருத்தக் கிறிஸ்தவத்தை இந்தப் பகுதியில் கொண்டு வந்தார். ரிங்கல் துவ்பே, மீட் ஐயர், அவரது மனைவி ஆகியோர் குமரி மாவட்டதுக் கல்வி வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் முக்கியக் காரணிகளாக இருந்தார்கள். சீர்திருத்தக் கிறிஸ்தவத்தில் தங்களை பிணைத்துக் கொண்டு கல்வி கற்றுக் கொஞ்சம் கொஞ்சமாக சுதந்திரச் சிந்தனைகளை ஏற்றுக் கொண்டிருந்தார்கள் நாடார்கள். கிறிஸ்தவத்துக்குள் வந்த நாடார் ஆண்களும் பெண்களும் ஆடை அணிந்து ஞாயிறு பூசைக்கு வரும் சூழலை ஏற்படுத்தியவர் ரிங்கல் துவ்பே. கிறிஸ்தவ நாடார்களுக்குக் கிடைத்த இந்த உரிமையை இந்து நாடார்களும் ஏற்று, இந்து நாடார் பெண்கள் தங்கள் மார்பை ஆடையால் மூடி வெளியே புழங்கத் தொடங்கினார்கள். இது, நாயர் மற்றும் மேல் சாதியினர் கண்களை உறுத்தியது. விளைவாகப் பெரும் கலவரம் மூண்டது. சுமார் 30-40 ஆண்டுகள் இந்தக் கலகம் நீடித்தது. இந்து மற்றும் கிறிஸ்தவ நாடார் பெண்கள் பொது இடத்தில், தெருக்களில் மானப்பங்கப்-படுத்தப்பட்டார்கள். வரலாற்றில் இதுவே தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது. (தோள் சீலை-தோளை மூடும் சேலை, ரவிக்கை) தோள் சீலை போராட்டத்தைப் பிறகு பார்க்கலாம்.
இந்தச் சூழலில்தான் வைகுண்டர் தோன்றுகிறார்.
வைகுண்ட சாமி, கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரிக்கு அருகே உள்ள சாஸ்தான் கோவில்விளை (அதன் இன்றைய பெயர் சாமித்தோப்பு) என்ற ஊரில் 1809-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி, பொன்னு நாடார் - வெயிலம்மை தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். இந்த ஆண்டில் மைலாடியில் சீர்த்திருத்த கிறிஸ்தவ சமயம் வேர்விட்டது. வைகுண்ட சாமிக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் முடிசூடும் பெருமாள் என்பது. அக்காலத்தில் இப்படியான இரட்டைப் பெயர்கள் வைக்க நாடார்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆகவே பள்ளிக்கூடத்தில் அவருக்கு முத்துக்குட்டி என்று வைக்கப்பட்டது. வைகுண்ட சாமி, தன் வாழ்க்கை முறையினூடகவே, சமூக வாழ்க்கையையும் கூர்ந்து நோக்கிக் கற்றுக் கொண்டு வந்தார். தென் திருவிதாங்கூரின் இந்த நாகர்கோவில் குமரிப் பகுதி ஏடுகள் நிறைந்த மாவட்டம். மாலையானால் மக்கள் ஏடு படிக்கும் பழக்கம் உள்ளவர்கள். வைகுண்டர் ஏடும் எழுத்தும் கற்றார். தாமரைக் குளம் கிறிஸ்தவப் பள்ளியிலும் அவர் கற்றிருக்கிறார். கிறிஸ்தவ விவிலியத்தில் (பைபிள்) அவருக்கு நிறைந்த ஞானம் இருந்தது.- இளமையிலேயே சீர்திருத்த மனோபாவம் அவரிடம் இருந்தது. அவருடைய 22-ம் வயதில் கடுமையான நோய் கண்டு, மரணத்தை எட்டிப் பார்த்திருக்கிறார். வேண்டுதலாக அவரது தாயாரும் உறவினர்களும், அவரைத் தொட்டில் கட்டித் திருச்செந்தூருக்குத் தூக்கிச் சென்றார்கள். திருச்செந்தூரில், தன் எதிர்காலம், ஆற்ற வேண்டிய பணி பற்றிச் சிந்தித்து, ஒரு முடிவோடு திரும்பி இருக்கிறார். அவர் வாழ்வில் இதை அற்புதம் என்பார்கள். மூன்று நாட்கள் காணாமல் போயிருந்து, தெளிந்த முடிவோடு திரும்பி வந்திருக்கிறார் அவர்.
அடுத்த ஆறு ஆண்டுகள் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதன்பின் 1840-ல் தன் 32-ம் வயதில் சேவை, தொண்டு, கலக வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறார் அவர். மக்களுக்கு இரண்டு எதிரிகளை இனம் காட்டினார். ஒருவர் வெண்ணீசன் என்கிற கிறிஸ்தவ, வெள்ளைக்காரர்கள். கலிநீசன் என்ற ஆண்ட அரசனைக் குறிப்பிடுகிறார். வைகுண்டர் இந்து மதத்தைவிட்டு வெளியேறவில்லை. ஆனால், இந்து மதம், அவரையும் அவரது மக்களையும் புறம் தள்ளியது. அந்த இந்து மதத்தின் கடவுள்கள் அவரையும், அவருடைய மக்களையும் தம் கோயிலுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கவில்லை. ஆனால், அவர் தன்னை இந்துவாகவும், நாடாராகவும், ஒருபோதும் கருதியதில்லை என்பதே அவர் சிறப்பு. தனக்கென்று தாழ்ந்து கிடக்கும் மக்கள் அனைவருக்குமாக ஒரு புது வழியைக் கண்டார். அதன் பெயர் அன்பு வழி இயக்கம். அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட பதினெட்டு தாழ்த்தப்பட்ட சாதியர்க்கும் ஆன இயக்கம் அது. இதைப் பின்னாளில் ‘அய்யா வழி’ என்று குறிப்பிட்டார்கள். இந்துமதக் கடவுளான விஷ்ணுவை அவர் துதித்தார். அந்த விஷ்ணு அன்பு மயமான, வைகுண்ட வாசன். எல்லாச் சாதிக்கும் பொதுவான ஈசர்.
அந்தக் காலத்தில் பொதுக்-கிணற்றில் எல்லாச் சாதியாரும் நீர் அருந்த முடியாது. வைகுண்டர் ஒரு சமூகப்புரட்சி செய்தார். அவரே ஒரு கிணறு வெட்டி பள்ளு பறை என்று சொல்லப்பட்ட அனைத்துச் சாதியரையும் அந்த முந்திரிக் கிணற்றில் குளிக்கவும் குடிக்கவும் செய்தார். இதன் மூலம் சாதி ஒடுக்கு முறைக்கு ஆக்கபூர்வமான ஒரு புதிய மறுப்பைத் தந்தார்.
கல்விப் பணியிலும் தீவிரமான கவனம் செலுத்தினார் வைகுண்டர். தன் சீடர்களைக் கொண்டு பல நிழல் தாங்கல்களை ஏற்படுத்தினார். நிழல்தாங்கல்கள் பகலில் பள்ளிக்கூடங்களாகவும், இரவில் சமூகக் கூடங்களாகவும், இராப் பள்ளிக் கூடங்களாகவும் செயல்பட்டன. வழிப்பாட்டு மன்றமாகவும் அவை செயல்பட்டன--. வைகுண்டர், இந்து மதத்தில் இல்லாத கூட்டு வழிபாட்டு முறையை சாதி பேதமின்றி உருவாக்கிக் தந்தார். அன்புவழி, சமயம் முதல்முதலாகக் கூட்டு வழிபாட்டு முறையை எல்லாத் தாழ்த்தப்பட்ட வகுப்பார்க்கும் உரிய முறையை ஏற்படுத்தியது.
அக்காலத்தில் அடிமைச் சின்னமாக, நாடார்கள் உள்ளிட்டு தாழ்த்தப்பட்ட சாதியார் எவரும், தலைப்பாகை அணியக் கூடாது. வைகுண்டர், ‘நீ யாருக்கும் அடிமை இல்லை. தலைப்பாகை கட்டு’ என்றார். தலைப்பாகை கட்டிக் கொண்டே கோயிலுக்குள் பிரவேசம் செய்யவேண்டும் என்றார். இன்னும், வைகுண்டர் உருவாக்கிய பதிகளில் (கோயில்களில்) அந்த நிலைமையே நீடிக்கிறது. தலைப்பாகையோடுதான் உள்ளே நுழைய வேண்டும்.
பெருந்தெய்வக் கோயில்களில் தாழ்த்தப்பட்டோர்க்கு நுழைவுரிமை இல்லை, அக்காலங்-களில். இன்றும்கூட பல கோயில்-களில் அப்படித்தான். ஆகவே, வைகுண்டர் தாமே பல பதிகளைக் கட்டினார். அவர் வாழ்நாளில் ஏழு பதிகளையும், ஏழு நிழல் பதிகளையும் கட்டி இருக்கிறார்.
வைகுண்டர் உருவாக்கிய கோயில்களில் சிலைகள் இல்லை. மாறாகக் கருவறையில், கண்ணாடியும், கண்ணாடிமுன் ஒரு விளக்குச் சுடரையும் வைத்தார். கண்ணாடியினுள் தெரியும் நீயே கடவுள். உனக்குள் சுடரும் ஒளியே கடவுள். உருவ வழிபாட்டுக்கு மாற்றான ஒளி வழிபாட்டை மக்களுக்கு அறிமுகப்படுத்திய முதல் ஞானி வைகுண்டர் என்றால் தவறு இல்லை. ஒளி சாதி மதம் இனம் கடந்த இயற்கை. சூரியன்போல எல்லோருக்கும் மேலே இருந்து எல்லோருக்கும் சமமாக ஒளியைத் தருவது. சமத்துவமே இயற்கை அல்லது கடவுள்.
கோயிலுக்குள் ஆரவாரத்தை மறுத்தார் வைகுண்டர். ‘காணிக்கை போடாதீங்கோ, காவடிகள் தூக்கா தீங்கோ’ என்றார் அவர்.
வைகுண்டரின் புகழும் தத்துவங்களும் திருவிதாங்கூர் அரசனை அச்சம் கொள்ள வைத்தன. அவன், அவரைச் சிறைபிடிக்க நினைத்தான்...
கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்ளான கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதியுகள் திருவாங்கூர் சமசுதானத்தின் கீழ் மன்னராட்சியின் கட்டுப்பட்ட்டில் இருந்தது. அப்போது மனுதர்ம அடிப்படையில் ஆட்சி நடந்து வந்த இந்து நாடாக இருந்தது.அந்த கால கட்டத்தில் சாதீயக் கொடுமைகளால் மக்கள் அதிக அடக்குமுறைக்கு ஆளாகினர். இந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார்(நாடார்), பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட 18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இவர்கள் மார்பகத்தை திறந்து போடுவதுதான் உயர் சாதியினருக்குத் தரும் மரியாதை என்று தரம் தாழ்ந்த எண்ணத்தில் திருவாங்கூர் சமசுதானம் ஒரு நடைமுறையை வகுத்திருந்தது. இதன்படி 18 சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியாமல் அவமானத்துடன் வாழ்ந்து வந்தனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து சீர்திருத்த கிறித்தவத்தை ஏற்றுக்கொண்ட நாடார் சாதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் சாதிப் பெண்களுக்கு மார்பை மறைத்து சேலை அணிய உரிமை கோரிப் போராடத் தொடங்கினர். இது தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது. 37 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு திருவிதாங்கூர் அரசு நாடார் கிருத்தவ பெண்களுக்கு தோள் சீலை அணியவும், மார்பகங்களை மறைக்கவும் உரிமை அளித்தது.
போராட்டத்திற்கான காரணம்
ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் ஜன்மிசம்பிரதாயமும், 10 மற்றும் 11 ம் நூற்றான்டுகளில் ஆரியப் பிராமணர்களிம் (நம்பூதிரிகள்) ஆதிக்கம் சேர நாட்டில் ஓங்கத் தொடங்கிய வேளையில் சாதிக் கட்டுப்பாடுகள் உருவெடுத்தன. 12 ம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் ஜென்மி சம்பிரதாயத்தின் உத்வேகத்தால் அதிகரித்து, மேல் சாதி இந்து என்றும், கீழ் சாதி இந்து என்றும் பாகுபாடுகள் உருவாகி காணாமை, நடவாமை, தொடாமை போன்ற சமுதாய முறைகள் உருவாகிற்று. இந்த தீமைகளில் ஒரு பிரிவு தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக் கட்டுப்பாடு. உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும். சான்றாக நம்பூதிரிகளின் முன்பு சூத்திர நாயர் பெண்கள் மார்பகங்களை மறைக்க கூடாது, அதேப் போன்று சாதி வரிசையின் அடிப்படையில் கீழ் சாதி இந்து பெண்கள் அனைவரும் மார்பகங்களை மறைக்காமல் நடமாட வேண்டும் என்பது மரபாகிவிட்டது. இவ் உடைக் கட்டுப்பாட்டை மீறினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.[1]
[தொகு]உடை கட்டுபாடு
திருவிதாங்கூர் சமசுதானத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் தங்கள் இடுப்பிற்கு மேல் உடை அணிய மறுக்கப் பட்டனர். கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்களுக்கும் இது திணிக்கப்பட்டது. உயர் சாதி பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி அளிக்கப் பட்டது என்றாலும் நம்பூதிரிப் பிரானணர்கள் முன்பு அனைத்துச் சாதிப் பெண்களும் திறந்த மார்புடனே நிற்க வேண்டும் என்ற ஈனக் கட்டுப்பாடு இருந்தது. இந்த உடை கட்டுப்பாடுகள் மிக கடுமையாக கடைபிடிக்கப் பட்டன. உடை அணியும் விதத்தை வைத்தே மக்களை உயர்ந்தவர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டார்கள். கொத்தனாவிளை என்ற ஊரில் 1822 ம் ஆண்டு ஒரு சிறிய போராட்டம் நடைப்பெற்றது. அதன் பிறகு 37 வருட காலம் இப் பேராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட போராட்டம் 1822 முதல் 1823 வரையும், இரண்டாம் கட்டப் போராட்டம் 1827 முதல் 1829 வரையும், மூன்றாம் கட்டப் போராட்டம் 1858 முதல் 1859 வரையும் நடைப்பெற்றது.
[தொகு]முதல் போராட்டம்
சீர்திருத்தக் கிறித்தவ சமயத் தொண்டரான மீட் பாதிரியார் கிறித்தவ பெண்களின் மார்பகங்களை மறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.இதனால் கிறித்தவ பெண்கள் தங்கள் மார்பகங்களை துணிந்து மறைத்ததுமல்லாமல், அதற்கு மேல் ஒரு மேலாடையையும் பயன்படுத்தினர். இதனால் மேல் சாதியினர் கலவரம் செய்தனர். மே மாதம் 1822ம் வருடம் கல்குளம் மற்றும் இரணியல் பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதன் காரணமாக மீட் ஐயர் என்ற ஐரோப்பிய மறைப்பணியாளர் ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் என்பவருக்கு இச் சம்பவங்களைப் பற்றி விரிவாக கடிதம் எழுதினார். இதன் பயனாக ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் பத்மநாபபுரம் நீதிமன்ற விசாரனைக்கு உத்தரவிடுகிறார். இதன் பயனாக 1823 ம் ஆண்டு வெளியிடப்பட்ட நீதிமன்ற உத்தரவுப் படி சீர்திருத்தக் கிறித்தவர்களுக்கு மட்டும் குப்பாயம் என்ற உடையை அணியலாம் என்று தீர்ப்ளிக்கப் படுகிறது.
[தொகு]இரண்டாம் கட்ட போராட்டம்
மிக அதிகமாக பாதிக்கப் பட்ட இடங்களான ஆத்தூர், திற்பரப்பு, கண்ணனூர், அருமனை,உடையார்விளை, புலிப்பனம் ஆகிய இடங்களில் மீண்டும் 1827 ம் ஆண்டு போராட்டம் வெடித்தது. 1823 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ஒரு நிரந்தரமான தீர்வை அளிக்கத் தவறியது. இந்த ஆணையின் அடிப்படையில் கிறித்தவப் பெண்கள் உயர்சாதிப் பெண்கள் அணிவது போன்ற ஆடைகள் அணியக்கூடாது என்று தடை விதிக்கப் பட்டது. இதனால் கிறித்தவ நாடார் பெண்களிடம் அதிருப்தி ஓங்கியது. கிறித்தவ நாடார் பெண்கள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட குப்பாயம் என்ற மேலாடையை விட ஐரோப்பிய மறைப்பணியாளர்கள் மற்றும் உயர் சாதி பெண்கள் அணியும் உடைகளை அணிய ஆரம்பித்தனர். இவர்களைப் பின்பற்றி இந்து நாடார் பெண்களும் மேலாடை அணிய ஆரம்பித்தனர். இவர்களுக்கு முத்துக்குட்டி போன்றோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். இதற்கு ஆட்சியில் இருந்த நாயர்கள் எதிர்பு தெரிவித்தனர்.
[தொகு]மூன்றாம் கட்ட போராட்டம்
1858 ம் ஆண்டு விக்டோரியா மகராணியின் பிரகடனத்தையடுத்து தோள் சீலைப் போராட்டம் தீவிரமடைந்தது. விக்டோரியா மகராணியின் பிரகடனம்
'one soceity or Government should not interfere into the religious regulations or social restrictions of other society. Government servants should not intervene and discriminate anybody in the customary affairs that is being followed in the respective soceities. The violators of this order would be punished'[2]
இந்த பிரகடனம் நவம்பர் 1, 1858 ம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்தியாவை ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனியிடமிருந்து அரசாங்க கட்டுப்பாட்டில் கொண்டு வரும் போது ஆற்றிய உரை. இதை எதிர்த்து கிறித்தவ மறைப் பணியாளர்கள் ஆங்கிலேய அரசிடம் முறையிட்டனர். நெய்யாற்றின்கரையில் தொடங்கியப் போராட்டம் பாறசாலை, நெய்யூர் போன்ற ஊர்களுக்கும் பரவியது. பல இடங்களில் தெருக்களிலும், சந்தைகளிலும் பெண்கள் தாக்கப்பட்டனர். பெண்களின் மேலாடைகள் கிழித்து எறியப்பட்டன. ஆண்கள் தங்கள் உயிருக்கு பயந்து பல இடங்களில் ஒளிந்து வாழ்ந்து வந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் ஐரோப்பிய மறைபரப்பாளர்களின் பங்களாக்களில் ஒளிந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். டிசம்பர் 30, 1859 ம் நாள் கோட்டாறுப் பகுதியில் வைத்து கிறித்தவ நாடார்களுக்கும் உயர் சாதி நாயர்களுக்கும் இடையே மிகப் பெரிய சண்டை மூண்டது. இந்து நாடார்களும் கிறித்தவர்களுடன் இதில் கைகோர்த்து கொண்டனர்.
[தொகு]உடை உடுத்த உரிமை
இப் போராட்டத்திம் விளைவாகவும் ஆங்கிலேயர்களின் நெருக்கடியின் காரணமாகவும் திருவிதாங்கூர் அரசரும், திவானும் அனைத்து நாடார் பெண்களும் மத வேறுபாடு இல்லாமல் குப்பாயம் என்கின்ற மேலாடை அணியலாம் என்று உரிமை அளித்தனர். இதற்கான அரசாணை 26, சூலைத் 1859 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் உயர் சாதி பெண்கள் அணிவது போன்ற ஆடை அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த உரிமை மற்ற கீழ் சாதியினருக்கு அரசு வழங்கவில்லை. எனினும் கிறித்தவப் பெண்கள் அனைவரும் மேலாடை அணிந்தனர்.
[தொகு]மேற்கோள்கள்
↑ http://www.scribd.com/doc/113708/thesis-on-PONNAPPA-NADAR#fullscreen:on
↑ http://en.wikisource.org/wiki/Queen_Victoria%27s_Proclamation
[தொகு]வெளி இணைப்புகள்
LIBERATION OF THE OPPRESSED, A CONTINUOUS STRUGGLE, A CASE STUDY (Since 1822 A.D.)
முத்துக்கமலம் இணைய இதழில் நெல்லை விவேகநந்தா எழுதிய கட்டுரை
மதத்தை வேரறுத்த தோள்சீலைப் போராட்டம்
தோள் சீலைப் போராட்டம்
தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்
மறுபக்கம் தோள் சீலைப் போராட்டம்
சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 5. உடை
எழுதப்படாத சரித்திரம் சமூக புரட்சியாளர் வைகுண்ட சாமி!
எழுதப்படாத சரித்திரம்
பொன்னீலன் எழுதிய தெற்கிலிருந்து
பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் மையம் வெளியிட்ட பண்பாட்டு வேர்களைத் தேடி
அ.கா.பெருமாள் எழுதிய தென் குமரியின் கதை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக